திருமாணிகுழிஇறைவர் தலவரலாறு

0 154

தலவரலாறு திருமாணிகுழிஇறைவர்

திருப்பெயர்: வாமனபுரீஸ்வரர்,

உதவிநாயகர், மாணிக்கவரதர்.

இறைவியார் திருப்பெயர்: அம்புஜாட்சி,

உதவிநாயகி, மாணிக்கவல்லி.

தல மரம்: கொன்றை மரம் – Konrai tree (Indian Laburnum Tree)

தீர்த்தம் : சுவேத தீர்த்தம், கெடிலநதி.

வழிபட்டோர்: சம்பந்தர், அப்பர், சுந்தரர்,சேக்கிழார், திருமால். Sthala Puranam

 

திருமால் பிரம்மசாரியாக வந்து மாவலிபால் மூன்றடிமண் கேட்டு அவனையழித்த பழிதீர இங்கு வந்து வழிபட்டாராதலின் இக்கோயில் ‘மாணிகுழி ‘ என்று பெயர் பெற்றது. (மாணி – பிரம்மசாரி)சுவாமி எப்போதும் இறைவியுடன் இருப்பதாக மரபாதலின், மூலவர் சந்நிதியில் எப்போதும் திரைப்போடப்பட்டுள்ளது. (இத்திரையின் மேற்புறத்தில் ஏகாதச ருத்திரர்களில் ஒருவராகிய பீமருத்திரர் உருவம் எழுதப்பட்டுள்ளது.) இந்தத் திரைக்கே அர்ச்சனை, பூஜை வழிபாடு மகாவிஷ்ணு மாணியாக – பிரம்மசாரியாக வழிபடுவதற்குக் காவலாக பீமருத்திரர் உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

 

இத்தலம் தேவாரப் பாடல்களில் “உதவிமாணிக்குழி” என்று குறிக்கப்படுகிறது. இதனால் ‘உதவி ‘ என்பது ஊர்ப் பெயராக இருந்து, காலப்போக்கில் ‘மாணிகுழி’ என்னும் கோயில் பெயரே ஊருக்குப் பெயராகியிருக்கலாம் என்று தோன்றச்செய்கிறது. (இதற்கேற்ப தலபுராணத்தில் வரும் செய்தி வருமாறு:-)வடநாட்டு வணிகன் அத்ரி என்பவன் இப்பகுதியில் வந்து கொண்டிருந்த போது திருடர்கள் கொள்ளையடிக்க முற்பட, இறைவன் அவ்வணிகனைத் திருடர்களிடமிருந்து காத்து உதவி புரிந்தார்; இதனால் இத்தலம் ‘உதவி ‘ என்றும் இறைவன் ‘உதவிநாயகர் ‘ இறைவி ‘உதவி நாயகி ‘ என்றும் அழைக்கப்படுகிறார்கள்.கல்வெட்டிலும் சான்றாக, இத்தலம் ‘உதவி ‘ என்றே குறிக்கப்பெறுகின்றது.

 

தேவாரப் பாடல்கள்    : பதிகங்கள்     :    சம்பந்தர்   –   1. பொன்னியல் (3.77); பாடல்கள்      :   சேக்கிழார்  –      அங்கணரை அடி போற்றி (12.05.90) தடுத்தாட்கொண்ட புராணம்;                                                            தேவர் பிரான் திரு மாணிக்குழியும் (12.21.136) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்,                                                                                                 செல்வம் மல்கிய (12.28.962) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.Specialitiesபெரிய புராணத்தில், சுந்தரர் கெடில நதியில் நீராடித் திருமாணிகுழியைத் தரிசித்ததாக குறிப்பிருந்தும் அப்பெருமான் பாடிய பதிகம் எதுவும் கிடைக்கவில்லை.

 

நடராச சபையிலுள்ள நடராசர் திருமேனியில் பஞ்சாட்சரம் பொறிக்கப்பட்டுள்ளது என்கின்றனர்; அதைப் பார்க்கும்போது அவ்வடிவமாகத் தெரியவில்லை; குறுக்கும் நெடுக்குமாகச் சிறுகோடுகளாக ஏதோ ஒருவித அமைப்புள்ளது.சோழர்காலக் கட்டமைப்புடையது இக்கோயில்.இத்தலத்திற்கு வாமனபுரி, இந்திரலோகம், பீமசங்கரக்ஷேத்திரம் என்பன வேறு பெயர்கள்.மூலவர் தரிசனத்திற்கு செல்லும் வாயிலில் வாமனாவதார வரலாறு சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன.ஆலய வழிபாட்டில் அர்ச்சனை, தீபாராதனை, பூசை முதலியன முதலில் பீமருத்திரருக்கே நடைபெற்று, பின்னர் சுவாமிக்கு நடைபெறுகிறது.

 

இறைவன் எப்போதும் இறைவியுடன் இருப்பதாகச் சொல்லப்படுவதால், இத்தலத்தில் அர்த்தசாம பள்ளியறை வழிபாடு என்பது தனியே கிடையாது.இத்தலத்தில் கார்த்திகையில் (பரணியில் அல்லாமல்) திருவண்ணாமலையில் நடைபெறுவது போல ரோகிணியில் தீபதரிசனம் நடைபெறுகின்றது.இத்திருக்கோயிலில் சோழமன்னர்களில் முதலாம் குலோத்துங்கசோழன், விக்கிரமசோழன், இரண்டாம் குலோத்துங்கன், மூன்றாங் குலோத்துங்க சோழன், மூன்றாம் இராஜராஜ சோழன், இவர்கள் காலங்களிலும், பாண்டிய மன்னரில், விக்கிரம பாண்டியன் காலத்திலும், விசயநகர வேந்தரில் பிரதாபதேவ மகாராயர் காலத்திலும் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன.

 

இவற்றுள் இறைவர், திருமாணிகுழிமகாதேவர், உதவித் திருமாணி குழி ஆளுடையார், உதவித் திருமாணிகுழி மகாதேவர், திருமாணிகுழி உடையநாயனார், ஊர்செறி உதவி நாயகர் என்னும் பெயர்களால் குறிக்கப்பெற்றுள்ளனர். தேவாரத்தைப் போலவே, கல்வெட்டிலும் உதவித் திருமாணிகுழி என்று ஊரின் பெயர் குறிப்பிடப்பெற்றிருப்பது நோக்கத்தக்கது. இறைவரின் பெயர்களில் மேற்குறித்த ஊர்செறி உதவி நாயகர் என்பது விஜயநகர வேந்தனாகிய ஸ்ரீ பிரதாபதேவமகாராயரின் (சகாப்தம் 1357) கல்வெட்டில் காணப்பெற்றுள்ளது.

 

முதற்குலோத்துங்க சோழன் காலத்தில் இத்திருமாணிகுழி, விருதராசபயங்கர வளநாட்டு, மேற்காநாட்டு உதவித் திருமாணிக்குழி என்றும், இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்தில், சயங்கொண்ட சோழவள நாட்டு உதவித் திருமாணிகுழி என்றும், மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் இராஜராஜ வளநாட்டு மேற்காநாட்டு உதவித் திருமாணிகுழி என்றும், குறிக்கப்பெற்றுள்ளது. எனவே முதற் குலோத்துங்க சோழன் காலத்தில் இவ்வூரைத் தன்னகத்துக்கொண்ட வளநாடு விருதராச பயங்கரவளநாடு என்னும் பெயரையும், இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்தில் சயங்கொண்ட சோழ வளநாடு என்னும் பெயரையும், மூன்றாங்குலோத்துங்க சோழன் காலத்தில் இராஜராஜ வளநாடு என்னும் பெயரையும் பெற்றிருந்த செய்தி புலனாகிறது.

 

இக்கோயிலிலுள்ள `பூமாலை மிடைந்து` என்று தொடங்கும் விக்கிரம சோழனுடைய மெய்க்கீர்த்தி மாத்திரம் அடங்கிய கல்வெட்டு சோழ மன்னர்களுக்குத் தில்லைச் சிற்றம்பலத்து இறைவன் குலதெய்வம் என்று குறிப்பிடுகின்றது. `தன்குல நாயகம் தாண்டவம் பயிலும் செம்பொன் அம்பலஞ் சூழ்ந்த திருமாளிகையும் கோபுரவாசலில் கூடகசாலமும்….. பசும்பொன் மேய்ந்து` என்பது இதை உணர்த்தும் கல்வெட்டுப் பகுதியாகும். (திருமழபாடியில் உள்ள விக்கிரமசோழனின் மெய்க்கீர்த்தியிலும் இச்செய்தி கூறப்பெற்றுள்ளது.)தில்லையம்பதி, சோழமன்னர்களுக்கு முடிசூட்டும் பதிகளுள் ஒன்றாகும்.

 

இப்பதியில் இரண்டாம் குலோத்துங்கசோழன் முடிசூட்டிக் கொண்டான் என்று இவ்வூரிலுள்ள (மாணிகுழியில் உள்ள) அம்மன்னனுடைய கல்வெட்டுத் தெரிவிக்கின்றது. `ஸ்வஸ்தி ஸ்ரீ ராசகேசரி பன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் தில்லைநகர் சிறப்புடைத்தாகத் திருமுடி சூடிய ஸ்ரீ குலோத்துங்க சோழதேவற்கு யாண்டு அ (எட்டு) ஆவது ஜயங் கொண்ட சோழவளநாட்டு உதவித் திருமாணிகுழி உடையநாயனார் கோயில் தானத்தாற்கு மகனார் திருநட்சத்திரமான உத்திரட்டாதி நாள் தீர்த்தம் பிரசாதிக்க எழுந்தருளுகிற சித்திரைத் திருநாளைக்கும், விக்கிரம சோழன் சந்திக்கும் அமுதுபடி சாத்துப்படி உள்ளிட்டு வேண்டும் நித்த நிவந்தங்களுக்கு விட்ட….` என்பதாகும்.

 

உதவித் திருமாணிகுழி உடையார் திருமடை விளாகத்தில், ஸ்ரீ காழிநாடுடையான் திருமடம் என்று ஒரு திருமடம் இருந்ததை முதற்குலோத்துங்க சோழனது 49 ஆம் ஆண்டுக் 1கல்வெட்டுக் குறிப்பிடுகின்றது. அதற்கு மடப்புறமாக வானவன்மாதேவி நகரத்தார் நிலம் விட்டிருந்தனர்.தியாகசமுத்திரக்கூடம் பெரும்பற்றப் புலியூர்க்கோயிலினுள் இருந்ததை விக்கிரம சோழனின் 12 – ஆம் ஆண்டுக் கல்வெட்டு உணர்த்துகின்றது. இக்கூடத்தில் பள்ளிச்சோட்டை சோழகோனிலிருந்து, ஆறுவேலி நிலத்தைத் திருமாணிகுழி கோயிலில் எழுந்தருளு வித்த விக்கிரம சோழீச்சரமுடையார்க்கு வேண்டும் நிவந்தங்களுக்கு இருக்கும்படி விக்கிரம சோழன் கட்டளையிட்டிருந்தான்.

 

இக்கோயில் கல்வெட்டில் மூன்றாங்குலோத்துங்க சோழன், திரிபுவனச் சக்கரவர்த்தி வீரராசேந்திர சோழதேவன், இராசாக்கள் நாயகன் என்னும் பெயர்களால் குறிக்கப்பெற்றுள்ளான். வீர பாண்டியன் கல்வெட்டு, இவ்வூரை நடுவில் மண்டலத்து திருமாணிகுழி எனக்குறிப்பிடுகின்றது. சோழமண்டலத்திற்கும் தொண்டை மண்டலத்திற்கும் நடுவில் உள்ளது ஆகையால் நடுவில் மண்டலம் (நடுநாடு) எனப்பெயர்.முந்தைய தலம்<திருவடுகூர்(ஆண்டார்கோயில், திருவாண்டார் கோயில்) அடுத்த தலம்>திருப்பாதிரிப்புலியூர் (கடலூர் / திருப்பாப்புலியூர் )Contact Addressஅமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்திலிருந்து, திருவகீந்திபுரம் வழியாகப் பானூர், பண்ருட்டி செல்லும் பாதையில் திருவகீந்திபுரம் சென்று, அடுத்து, ‘சுந்தரர்பாடி’ என்னுமிடத்திற்கு அருகில் சாத்தாங்குப்பம் என்னும் வழிகாட்டி காட்டும் வழியில் சென்று, கெடிலநதிப் பாலத்தைக் கடந்து சிறிது தூரம் சென்றால் சாலையோரத்திலேயே கெடிலநதியின் தென்கரையில் கேபர் மலைத்தொடரின் அடிவாரத்தில் உள்ள இத்தலத்தை அடையலாம். கடலூர் – குமணங்குளம் நகரப் பேருந்து திருமாணிக்குழி வழியாகச் செல்கிறது

Leave A Reply

Your email address will not be published.