திருமண பாக்கியம் – குழந்தைப்பேறு அருளும் கரவீரநாதர் கோவில், திருக்கரவீரம்
இறைவன் பெயர்: கரவீரநாதர், பிரம்மபுரீஸ்வரர்
இறைவி பெயர்: பிரத்தியட்சமின்னம்மை
எப்படிப் போவது?
திருவாரூரில் இருந்து மேற்கே 10 கி.மீ. தொலைவில் இத்தலம் இருக்கிறது. திருவாரூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் வடகண்டம் என்ற ஊரின் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, கரையபுரம் செல்லும் வழி என்று கேட்டு அவ்வழியில் சென்றால் கோவிலை அடையலாம்.
கோவில் வரை வாகனங்கள் செல்லும். கோவில் வெட்டாற்றங்கரையில் அமைந்துள்ளது. அருகில் திருக்கண்ணமங்கையில் (திவ்யதேசம்) ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் கோவில் உள்ளது.
ஆலய முகவரி
அருள்மிகு கரவீரநாதர் திருக்கோயில்,
கரையபுரம், மணக்கால் ஐயம்பேட்டை அஞ்சல்,
திருவாரூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 610 104.
இவ்வாலயம் தினமும் காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். ஆலயத்தின் காப்பாளர் வீடு அருகில் இருப்பதால் எந்நேரமும் தரிசனம் செய்ய முடியும்.
கரவீரம் என்பது பொன்னிறப் பூக்களைத் தருகின்ற ஒருவகை மரத்தின் பெயர். பொன்னலரி என்றும் அதனைக் குறிப்பதுண்டு. ஒரு காலத்தில் பொன்னலரிக் காடாக இத்தலம் இருந்தது. பொன்னலரியைத் தலமரமாகக் கொண்டதால் இத்தலம் கரவீரம் என்று பெயர் பெற்றது.
இங்குள்ள இறைவன் கரவீரநாதர் என்றும் பெயர் பெற்றார். இத்தல இறைவன பிரம்ம தேவனால் பூஜிக்கப்பட்டவர் ஆதலால், இறைவனுக்கு பிரம்மபுரீஸ்வரர் என்ற் பெயரும் உண்டு.
கௌதமர் பூசித்த இத்தலம், திருக்கண்ணமங்கை பெருமாள் கோயிலோடு இணைந்த கோயிலாகும். நான்கு புறமும் மதில்சுவருடன் ஒரு முகப்பு வாயிலுடன் ஆலயம் அமைந்துள்ளது. கோவிலுக்கு வெளியில் ஆலயத்தின் தீர்த்தமான அனவரததீர்த்தம் இருக்கிறது.
முகப்பு வாயில் கடந்தால் விசாலமான முற்றவெளியுடன் வெளிப் பிராகாரம் உள்ளது. நேரே பலிபீடம், அடுத்து நந்தி மண்டபம் ஆகியவை உள்ளன. சுவாமி, அம்பாள் கோயில்களைச் சேர்த்த பெரிய வெளிப் பிராகாரத்தில் விநாயகர், முருகன், சூரியன், சந்திரன், சனீஸ்வரன், பைரவர் ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன.
நந்தி மண்டபத்தை அடுத்து ஒரு சிறிய கோபுரம். கோபுர வாயில் வழியே உள்ளே சென்றால் நேரே கருவறையில் கிழக்கு நோக்கி இறைவன் சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ளார். மூலவர் கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். அம்பாள் சந்நிதி இறைவன் சந்நிதிக்கு வலதுபுறம் உள்ளது. இத்தகைய அமைப்புள்ள கோவில்கள் திருமணக் கோலம் என்று கூறுவார்கள்.
அம்பாள் சந்நிதிக்கு எதிரில் சூரிய பகவானின் சந்நிதியும் உள்ளது. இந்த ஆலயத்தில் அமாவாசை அன்று செய்யப்படும் ஹோமம் மிகவும் முக்கியமானதாகும். அமாவாசை சிறப்பு ஹோமத்தில் கலந்துகொண்டு இறைவனையும் இறைவியையும் வழிபட்டு வந்தால், திருமாங்கல்ய பலம் மற்றும் மழலைச் செல்வம் கிடைப்பது கண் கண்ட உண்மையாகும்
இக்கோவிலில் கெளதம முனிவருக்கு தனி சந்நிதி உள்ளது. அமாவாசை நாள்களில் கெளதம முனிவர் ஜீவசமாதியில் உள்ள தலவிருட்சத்துக்குப் பெண்கள் தண்ணீர் ஊற்றிவிட்டு, பின் பிரம்மபுரீஸ்வரரை வழிபாடு செய்கிறார்கள். இதனால், அடுத்த அமாவாசைக்குள் திருமணம் நிச்சயமாகும் என்பது நம்பிக்கை.
ஆலயத்தின் தலவிருட்சமான செவ்வரளி மரம், மேற்கு வெளிப் பிராகாரத்தில் இறைவன் சந்நிதி விமானத்துக்குப் பின்புறம் உள்ளது. இத்தலத்துக்கு வந்து தலவிருட்சமான செவ்வரளிக்கு 3 குடம் தண்ணீர் ஊற்றி, அம்பாளின் திருப்பாதத்தில் 3 மஞ்சள் கிழங்கு வைத்து வழிபட வேண்டும். பிறகு இந்த மஞ்சளை தண்ணீரில் கரைத்து, அந்த நீரில் நேய்வாய்ப்பட்ட குழந்தைகளை குளிப்பாட்டினால் நோய் குணமாகும்; குழந்தைகள் நோயின்றி வாழ்வார்கள் என்பது ஐதீகம்.
இத்தலத்தில் இறைவன் ஒரு கழுதைக்கும் காட்சி கொடுத்துள்ளார். இவ்வாலயத்தில் உள்ள சிவலிங்கத்தை ஒரு கழுதை பலகாலம் கடும் தவம் செய்து வந்தது. அது இறந்துவிடும் சமயம், அக்கழுதைக்கு இறைவன் காட்சி கொடுத்தார். இறைவனைக் கண்ட மகிழ்ச்சியில், கழுதை கிழக்கே பல காத தூரம் ஓடி கடற்கரையை அடைந்து அங்கிருந்து திரும்பி இறைவனை வணங்கியது.
இங்கிருந்து இறைவன் கழுதைக்கு காட்சி கொடுத்து அருள் செய்தார். ஆகையால், இன்றும் ஆலய வாயிலில் இருந்து கடற்கரை வரை நேர்க்கோட்டில் பல மைல் தூரத்துக்கு வீடுகளோ, கட்டடங்களோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இத்தலத்து இறைவன் மேல் சம்பந்தர் பாடியுள்ள இப்பதிகம் முதல் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. திருஞானசம்பந்தர் இத்தலம் வந்தபோது இருட்டிவிட்டதால், இரவு தங்கி மறுநாள் இறைவனை பாடியுள்ளார்.
*அன்பே சிவம்*