ராசிகளில் தோஷ ராசி என்று உண்டா?
ஜோதிட உலகம் என்பது அறிவியலாகும்! வான மண்டலத்தில் சஞ்சரிக்கும் கோள்களுக்கும் பூமியை தரிசிக்கும் உயிர்களுக்குமான இணைவே ஜோதிட சாஸ்திரம்.
ஒரு குழந்தை அதன் தாயின் கருவில் இருந்து பூமிக்கு வரும் நேரத்தில், வானில் கோள்கள் சஞ்சரிக்கும் நிலையினை வைத்தே அக்குழந்தையின் எதிர்காலம் கணிக்கப்படுகிறது. இப்படி கணிக்கப்படுவதே நமது ஜாதகமாக இருக்கிறது.
ஒருவரின் ஜாதகத்தை வைத்து அவருடைய வாழ்க்கையின் அத்தனை நிலைகளையும் மிகத் துல்லியமாக கணிக்க முடியும். வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் அவருடைய நிலை எத்தகையதாக இருக்கும். இறுதிநாள் எதுவாக இருக்கும். அதுவரையில் அவர் சந்திக்கும் யோகங்கள், பிரச்சனைகள் என்னவாக இருக்கும் என்பதையெல்லாம் ஒரு ஜாதகத்தை வைத்து அறிந்து கொள்ள முடியும்!
இதை யாரால் அறிய முடியும் என்றால், ஜோதிட உலகில் ஆழ்ந்த அனுபவம் கொண்டு, தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு வருபவர்களால் மட்டுமே முடியும்.
இந்த நிலையில் ஒரு கேள்வி… இந்த ராசியில் பிறந்தால், அது தோஷ ராசியா? ஒரு குறிப்பிட்ட ராசியில் பிறப்பதால் நமக்கு தோஷம் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தக் கேள்வி மிக மிக தவறானதாகும்.
பொதுவாக, எல்லா ஜாதகத்தையும் யோக ஜாதகம் என்று கூறி விட முடியாது, எல்லா ஜாதகத்தையும் தோஷ ஜாதகம் என்றும் கூறி விட முடியாது.
அந்த ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை அறிவதால், அவற்றின் வழியாக எத்தகைய யோகங்கள் அந்த ஜாதகருக்கு இருக்கிறது? எத்தகைய தோஷங்கள் அந்த ஜாதகருக்கு இருக்கிறது என்பதை அனுபவமிக்க ஜோதிடர்களால் தெரிந்து கொள்ள முடியும்.
யோகங்கள் கொண்ட ஜாதகருடைய வாழ்க்கை வளமானதாக இருக்கும். அவர்கள் நினைப்பதெல்லாம் நடக்கும். செல்வாக்கும் அந்தஸ்தும் அவர்களுக்கு இருக்கும். அதே நேரத்தில், தோஷங்கள் கொண்ட ஜாதகருடைய நிலை அவருடைய வாழ்க்கையில் எல்லாவற்றிலும் தடைகளையும் சந்திக்க வேண்டியதாக இருக்கும். ஒவ்வொன்றிலும் போராடி போராடி வெற்றியடைய வேண்டியதாக இருக்கும். அவருடைய கைக்கு வரவேண்டியது கடைசி நேரத்தில் வேறு ஒருவருடைய கைக்கு சென்று விடும்.
இதற்கெல்லாம் காரணம் ஜாதகத்தில் உள்ள யோக நிலைகளும் தோஷ நிலைகளும்தான்.
ஜோதிடத்தின் மூலம் வருவாயை ஈட்ட முடியும் என்ற நிலை உருவாகியுள்ள காரணத்தினால், இன்றைய தினம் ஜோதிடம் குறித்த அடிப்படை அறிவுகள்கூட இல்லாதவர்களும், பஞ்சாங்கத்தை வைத்து குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி என்பதை மட்டுமே அறிந்து, அங்கே குரு வந்துவிட்டார்… இங்கே சனி வந்துவிட்டார் என்று கூறுபவர்களும் ஜோதிடர்களாக உலா வந்து கொண்டிருக்கின்றனர்.
ஜோதிடம் என்பது மிகப்பெரிய கடல் என்பதோ… அதற்குள் மூழ்கி முத்தெடுப்பதென்பது எளிதான வேலையல்ல என்பதோ அவர்களுக்குத் தெரியாது.
எனக்கு ஜோதிடத்தின் சூட்சுமங்கள் அத்தனையும் தெரியும் என்று மிகப் புகழ்பெற்ற ஜோதிடர்கூட சொல்ல மாட்டார்… காரணம், ஜோதிடம் குறித்த பாடங்கள், நம்முன்னோர் எழுதி வைத்துள்ள பலன்களை எல்லாம் படித்து முடிப்பதற்கு… தெரிந்து கொள்வதற்கு நீண்ட நாட்கள்… நீண்ட காலம் வேண்டும்.
இந்த நிலையில் வருமானத்திற்காக தங்களை ஜோதிடர்களாக காட்டிக் கொண்டிருப்பவர்களை நம்பி அவர்களிடம் ஜாதகத்தை எடுத்துச் செல்பவர்களுக்கும் சரியான பலன்கள் என்பது ஒரு சதவிகிதம் கூட கிடைப்பதற்கு வாய்ப்பே கிடையாது.
இங்கே என்ன நடக்கிறது என்றால், ஜோதிடம் அறிந்த ஒருவர் இருக்கிறார், அவர் மறைந்த பிறகு அவருடைய வாரிசாக இருப்பவருக்கு ஜாதகமே தெரியாது என்றாலும், ஏதோ தெரிந்ததை வைத்து தன்னையும் ஜாதகராக நிலைநிறுத்திக் கொள்கிறார். அவருடைய தந்தையிடம் ஜாதகப்பலன் கேட்டவர்கள் இவரையும் நம்பி இவரிடம் கொண்டுவந்து ஜாதகத்தை கொடுக்கின்றனர். அவரால் எப்படி சரியான பலன்கள் கூற முடியும்? தனக்குத் தெரிந்த ஓரளவு விவரங்களை வைத்து, சரியான பலன் கூறாமல் ஏமாற்றுகிறார். அடுத்து ஆலயங்களில் மந்திரம் ஓதுபவர் தனக்குத்தெரிந்த பஞ்சாங்க அறிவின்படி ஜோதிடராக தம்மைக் காட்டிக்கொள்கிறார்.
இத்தகையவருக்கு பஞ்சாங்கத்தில் உள்ள குறிப்புகள், கிரகப் பெயர்ச்சிகள் பற்றி தெரியுமே ஒழிய, கிரகங்கங்களின் காரகத்துவங்களோ, பாவகங்களின் காரகத்துவங்களோ, கிரகங்களின் சேர்க்கைகளால், பார்வைகளால் உண்டாகும் பலன்களோ தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை.
காரணம், ஆலய வழிபாட்டுமுறை என்பதும், ஜாதக அறிவு என்பதும் வேறு வேறு.
அதனால், ஆலயங்களில் அர்ச்சனை செய்பவர்கள் எல்லாம் ஜோதிட அறிவு பெற்றவர்களாக இருப்பார்கள் என்று கூறவே முடியாது.
அவர்களை ஜோதிடர்களாக நினைத்துக்கொண்டு அவர்களிடம் சென்று பலன் கேட்பவர்களின் நிலைதான் பரிதாபமானது.
சரி, இந்த நிலையில், ஒரு ராசியில் பிறப்பதால் தோஷம் வந்து விடுமா? ஒரு லக்னத்தில் பிறப்பதால் தோஷம் வந்து விடுமா? ஒரு நட்சத்திரத்தில் பிறப்பதால் தோஷம் வந்து விடுமா என்ற கேள்விகளுக்குரிய பதில்களை பார்ப்போம்…
பொதுவாக முன்னதாகவே சொல்லியிருப்பதுபோல் எல்லா ஜாதகமும் தோஷ ஜாதகம் கிடையாது. அதே நேரத்தில் நம்முடைய பிறப்பு என்பது கர்ம வினைகளால் ஆனது என்பதால் ஏதாவது ஒரு தோஷம் இல்லாமல் நம்முடைய பிறப்பே கிடையாது என்பதையும் நாம் உணர வேண்டும்.
ஒருவருடைய ஜாதகம் யோக ஜாதகமாக இருந்தாலும் அவருடைய ஜாதகத்திலும் ஏதேனும் ஒரு தோஷம் இருக்கும். அதைத் தெரிந்து கொள்வதற்கு தனி அறிவு வேண்டும்.
அதற்கு ஒரு எளிமையான தகவல்… திதி சூனிய ராசி என்பது! இந்த, திதி சூனிய ராசி என்பது பௌர்ணமியில் பிறப்பவர்களுக்கும் அமாவாசையில் பிறப்பவர்களுக்கும் கிடையாது. மற்ற அனைத்து திதிகளில் பிறந்தவர்களுக்கும்… ஒருவருக்கு இரண்டு ராசிகள் திதி சூனிய ராசிகளாக இருக்கலாம், மற்றவருக்கு நான்கு ராசிகள் திதி சூனிய ராசிகளாக இருக்கலாம். அத்தகைய திதி சூனிய ராசிகளின் அதிபதிபதிகளுடைய தசாபுத்தி காலங்களும், அந்த ராசிகளில் சஞ்சரிக்கும் கிரகங்களின் தசா புத்தி காலங்களும், அந்த கிரகங்கள் ஆட்சி, உச்சம், நட்பு என்ற நிலைப்பாட்டோடு ஜாதகத்தில் சஞ்சரித்தாலும் அந்த கிரகங்களால் அவர்கள் வழங்க வேண்டிய காரகத்துவத்திற்குரிய யோகப் பலன்களை வழங்க முடியாமல் போகும்.
நாம் என்ன நினைத்துக் கொண்டிருப்போம்! இப்போது நமக்கு இந்த தசை நடக்கிறது… இந்த தசா நாதன் உச்சமாக இருக்கிறார்! ஆட்சியாக இருக்கிறார்! நட்பாக இருக்கிறார், அதனால் நாம் பெரிய அளவில் இந்த திசையில் சாதித்து விடலாம் என்று கணக்குகள் போட்டிருப்போம். ஆனால் சூனிய திதி ராசிக்குரிய, ராசியில் சிக்கிய அந்த தசாநாதனால் யோகமான பலன்களை அந்த ஜாதகருக்கு வழங்க முடியாமல் போய்விடும்.
இங்கே உங்களுக்கு ஒரு தகவல் கிடைத்து விட்டதா? சரி இதற்கு என்னதான் தீர்வு என்பதையும் நாம் பார்க்க வேண்டும்! திதி சூனிய ராசியின் அதிபதி யார்? அங்கு சஞ்சரிக்கும் கிரகங்களின் அதிபதிகள் யார்? அவர்களுடைய ஆலயங்களுக்கு சென்று பரிகாரம் செய்து வருவதன் வழியாக… அந்த அந்த கிரகங்களுக்குரிய ஆலயங்களுக்கு சென்று வருவதின் வழியாக நம்முடைய சங்கடங்கள் போகும்.
அடுத்து, பெருமளவில் ஜாதகர்களை சங்கடப்படுத்துவது, சோதனைக்கு ஆளாக்குவது, பித்ரு தோஷம், பிரம்மஹத்தி தோஷம், புனர்ப்பூ தோஷம், நாக தோஷம் என்ற தோஷங்கள் ஆகும்.
இந்த தோஷங்கள் எல்லாம் குறிப்பிட்ட ராசியின் அடிப்படையில் ஏற்படுவதில்லை. நட்சத்திரத்தின் அடிப்படையில் ஏற்படுவதில்லை. லக்னத்தின் அடிப்படையில் ஏற்படுவதில்லை. கிரகங்களின் பார்வைகளாலும் இணைவுகளாலும்தான் இந்த தோஷங்கள் உண்டாகிறது. அதனால், எல்லா ஜாதகருக்கும் இந்த தோஷங்கள் இருக்கும் என்று கூற முடியாது. அதே நேரத்தில் ஒரு சில ஜாதகருக்கு இந்த தோஷங்கள் இருக்கலாம். இந்த தோஷங்களில் ஏதேனும் ஒரு தோஷம் இருக்கலாம். அதன் வழியாக அந்த ஜாதகரின் வாழ்க்கையில் சோதனைக்குமேல் சோதனை! தடைகளுக்குமேல் தடை! நிம்மதியற்ற நிலை என்பது தொடர்ந்து கொண்டே இருக்கும்.
சரி, தோஷங்கள் பற்றி கூறுகிறீர்களே… அதற்கு பரிகாரங்கள் உண்டா? என்று நீங்கள் கேட்கலாம்!
ஜாதகத்தில் உள்ள தோஷங்களுக்கும் பரிகாரம் என்பது உண்டு! நிவர்த்தி என்பது உண்டு! அதற்கு நம் முன்னோர்கள் எழுதி வைத்திருக்கின்ற ஜோதிட தகவல்களே நமக்கு வழிகாட்டிகளாக இருக்கிறது. அதன் அடிப்படையில் எந்த கிரகத்தினால்… கிரகங்களால் ஒரு தோஷம் ஏற்பட்டு இருக்கிறதோ அந்த கிரகத்திற்குரிய ஆலயம், அல்லது அந்த தோஷத்திற்குரிய பரிகார ஆலயத்திற்கு சென்று வருவதின் வழியாக… அங்கே சென்று பரிகாரம் செய்து கொள்வதின் வழியாக நமக்கிருக்கும் நெருக்கடிகள், சங்கடங்கள், பாதகமான நிலையெல்லாம் மாறும்.
தோஷங்கள் பற்றி தெரிந்து கொள்வதற்கு நம்முடைய புராணங்களே நமக்கு போதுமானதாக இருக்கிறது. அதைத் தெரிந்து கொண்டு சரியாக செயல்பட்டால் நம்முடைய சங்கடங்கள் நம்மை விட்டு விலகும்.
ஆனால், இவையெல்லாம் மந்திரம் படிக்கும் பூசாரிகளுக்கும், பஞ்சாங்கத்தை வைத்துக்கொண்டு ஜோதிடர்கள் என்று சொல்லி பிழைப்பு நடத்தி வருபவர்களுக்கும் தெரிந்திராத ரகசியம்.
சமீபத்தில்,
ஜோதிடர் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு பூசாரி பேசிய ஒரு வீடியோவை பார்த்தேன்… பித்ரு தோஷம் என்று பயப்பட வேண்டாம்… பித்ரு காரகன் என்றால் சூரியன், அவன் ஆறு, எட்டு, பனிரண்டில் மறைந்தால் அதுதான் பித்ரு தோஷம். அதற்கு சூரியனை வழிபட்டால் போதும் என்ற ரீதியில் அவருடைய பேச்சு இருந்தது. இந்த இடத்தில் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு தகவல் இருக்கிறது, பித்ரு தோஷம் என்பது சூரியன் என்ற ஒரு கிரகத்தினால் ஏற்படுவதல்ல… ஜாதகத்தில் பித்ரு காரகன் என்பவன் சூரியன்! அந்த சூரியன் ஒவ்வொருவருடைய ஜாதகத்திலும் அமைந்த லக்னங்களின் அடிப்படையில் லக்னாதிபதியாகவும் வரலாம், குடும்பாதிபதியாகவும் வரலாம், சகோதர ஸ்தானாதிபதியாகவும் வரலாம், சுகாதிபதியாகவும் வரலாம், பூர்வ புண்ணியாதிபதியாகவும் வரலாம், சத்ரு ஸ்தானாதிபதியாகவும் வரலாம், சப்தமாதிபதியாகவும் வரலாம், அஷ்டமாதிபதியாகவும் வரலாம், பாக்யாதிபதியாகவும் வரலாம், ஜீவனாதிபதியாகவும் வரலாம், லாபாதிபதியாகவும் வரலாம், விரயாதிபதியாகவும் வரலாம். அதனால் பித்ரு தோஷம் என்பது பித்ரு காரகனான சூரியன் ஆறு, எட்டு, பனிரெண்டில் மறைவதால் ஏற்படுவதல்ல.
பித்ருக்கள் என்பவர்கள் பொதுவாக நம்முடைய முன்னோர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். நம்முடைய முன்னோர்களில் யாராகிலும் ஒருவர், யாரிடத்திலாவது ஏதேனும் சாபத்தை பெற்றிருந்தால் அந்த சாபம் அவர் வழியாக அவருடைய அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் வந்து கொண்டிருக்கும். அதுதான் பித்ரு தோஷம்.
சரி, அந்த தோஷத்தை நம்முடைய ஜாதகத்தின் வழியே எப்படி நாம் கண்டு பிடிப்பது?
இங்கே பித்ரு காரகன் என்றால் சூரியன்! மாத்ரு காரகன் என்றால் சந்திரன்! ஒருவருடைய ஜாதகத்தில் சூரியனுடனோ அல்லது சந்திரனுடனோ பாப கிரகங்களான ராகுவோ அல்லது கேதுவோ இணைந்திருந்தால் அவர் பிறக்கும்போதே பித்ரு தோஷத்தோடு பிறந்திருக்கிறார் என்பதை பாண்டித்யம் பெற்ற ஜோதிடர்களால் அறிய முடியும்! அதேபோல் மூன்றாம் இடத்திலோ, அல்லது, ஐந்தாம் இடத்திலோ ராகுவோ கேதுவோ சஞ்சரித்தாலும் அந்த ஜாதகரும் பித்ரு தோஷத்துடன் பிறந்திருக்கிறார் என்பதை அறிய முடியும்!
இதையெல்லாம் விட்டுவிட்டு… சூரியன் ஆறு, எட்டு, பனிரெண்டில் மறைவதால் பித்ரு தோஷம் உண்டாகிறது என்று நினைத்துக் கொண்டு பலன்கூறும் பூசாரியால் தன்னிடம் வருபவர்களுக்கு எப்படி சரியான பலன்கள் கூற முடியும்.
இதேபோல்தான் ஒவ்வொருவருடைய ஜாதகத்திலும், கிரகங்கள் சஞ்சரிக்கின்ற நிலைகளை வைத்தும், கிரகங்களின் பார்வைகளை வைத்தும் அதன் வழியாக, எந்தவிதமான தோஷம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதை மிகத் துல்லியமாக கண்டுபிடிக்க முடியும். அதற்குரிய பரிகார ஸ்தலங்களாக புராணங்களில் கூறியுள்ள பரிகார ஸ்தலங்களையும் கூறி அவர்களை சரியாக வழி நடத்த முடியும். அவர்களைப் பாதுகாக்க முடியும்.
ஆனால், ஒரு சில பூசாரிகள் எனக்கு எல்லாம் தெரியும்… என்னால் பரிகாரம் செய்ய முடியும் என்று… லட்சக்கணக்கில் பணம் பறிப்பதும், ஏமாற்றுவதும் வாடிக்கையாக இருக்கிறது. இதற்கெல்லாம் மேலாக சமீபத்தில் சென்னையில் ஒரு பூசாரி அவர் பூஜை செய்துவரும் ஆலயத்திற்கு வந்த ஒரு குடும்பப் பெண்ணிடம் தன்னை ஜோதிடர் என்று சொல்லிக் கொண்டு, அந்தப் பெண்ணுக்கு தோஷம் இருப்பதாகவும், அந்த தோஷத்திற்கு பரிகாரம் செய்வதாகவும் சொல்லி வடபழனிக்கு அழைத்துச் சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அந்தப் பெண்ணின் கற்பை பறித்துள்ளார். இதுபோன்ற தவறான நபர்கள் ஜோதிடர்கள் என்று தங்களை சொல்லிக்கொண்டு ஏமாற்றி பிழைத்து வருவதால்தான் இவர்களிடம் சென்று பலன் கேட்பவர்களுக்கு சரியான பலன்கள் கிடைப்பதில்லை.
ஜோதிடம் என்பது கடல் போன்றது! இங்கே பிறப்பெடுத்த ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய விதியாக ஜாதகமே இருக்கிறது! இந்த நிலையில் ஒருவரின் விதி எத்தகையதாக இருக்கிறது? அவருடைய ஜாதகத்தில் எந்தவிதமான யோகம் இருக்கிறது? எந்தவிதமான தோஷம் இருக்கிறது? என்ன தசா புத்தி நடைபெறுகிறது? அதன் காரணமாக ஏற்படக்கூடிய பலன்கள் எத்தகையதாக இருக்கும்? அந்த தசா நாதனின் ஆலயம் எங்கிருக்கிறது? அங்கு சென்று எப்படி வழிபட்டு வரவேண்டும் என்பதையெல்லாம் ஜோதிட அறிவு கொண்டவர்களால்தான் தெரிவிக்க முடியும்! சரியாக வழிகாட்ட முடியும்.