திருவாசகம், தேவாரத்தை அரசுடைமையாக்க வேண்டும்: சிவாக்கர் தேசிய சுவாமிகள் கோரிக்கை
திருவண்ணாமலை கிரிவலப் பாதை வாயு லிங்கம் எதிரில் சித்ரா பவுர்ணமி திருவாசகம் முற்றோதுதல் ஞான வேள்வி பெருவிழா, சத்ரு சம்ஹார வேல் பூஜை நிகழ்ச்சி இன்று 1ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் நடைபெறுகிறது.
இதில் திருக்கயிலாய கந்தப்பரம்பரை ஸ்ரீமத் சிவாக்கர் தேசிய சுவாமிகள், தவத்திரு ஸ்ரீ ஆனந்த லிங்க சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டு அருளாசி வழங்குகின்றனர். இது குறித்து சிவாக்கர் தேசிய சுவாமிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
திருவாசகத்தை முழுவதும் பாடுவதும் கேட்பதும் மாபெரும் சிவ புண்ணியமாகும். பாவ, புண்ணிய கணக்குகளை எழுதும் சித்ரகுப்தர் பிறந்த தினமான சித்ரா பவுர்ணமி அன்று சித்தர்கள் விடிய விடிய தவம் செய்யும் திருவண்ணாமலை மண்ணில் முதன்முறையாக அண்ணாமலையார் திருமடம் சார்பில் உலக நன்மைக்காக சிவனடியார்கள், பொதுமக்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் திருவாசகம் முற்றோதுதல் ஞானவேள்வி பெருவிழா, சத்ரு சம்ஹார வேல் பூஜை நடக்கிறது. திருவாசகமும், தேவாரமும் தமிழர்களின் பொக்கிஷங்கள் ஆகும். எனவே இவற்றை அரசுடைமையாக்க வேண்டும். மேலும் அரசு சிவனடியார்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும். கிரிவலப் பாதையில் அன்னதானம் மட்டுமன்றி ஞான தானமும் நடைபெற வேண்டும். வெறும் காலோடு கிரிவலம் வருபவர்களுக்கு சாக்ஸ் போன்றவற்றை வழங்கிடும் நற்காரியங்களும் நடைபெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது அண்ணாமலையார் திருமடம் ஸ்ரீ ஆனந்த லிங்க சுவாமிகள், ரியல் எஸ்டேட் உரிமையாளர் கோசாலை ஜெ.வேலு, அடி அண்ணாமலை முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராமஜெயம் ஆகியோர் உடன் இருந்தனர்.