தேங்காயில் நெய் தீபம் ஏற்றினால் செல்வ வளம் பெருகும் அதிசய சிவத் திருத்தலம் ….
தென்னாடுடைய சிவனே போற்றி!எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!அண்ணாமலை எம் அண்ணா போற்றி!கண்ணாரமுதக் கடலே போற்றி!
தேங்காயில் நெய் தீபம் ஏற்றினால் செல்வ வளம் பெருகும் அதிசய சிவத் திருத்தலம் ….
திருமணத் தடை, தீராத கடன், குடும்ப பிரச்சனைகள் தீர குலதெய்வம் அல்லது அம்மன் கோவில்களில் தேங்காய் தீபம் ஏற்றி வழிபடும் வழக்கம் உள்ளது. ஆனால் தமிழகத்தில் உள்ள பழமையான சிவன் கோவில் ஒன்றில் தேங்காயில் நெய் ஊற்றி தீபம் இட்டு வழிபடும் வழக்கம் உள்ளது. இப்படி வழிபட்டால் வீட்டில் செல்வ வளம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த வழிபாடு மனிதர்கள் உருவாக்கிய வழக்கம் கிடையாது. சிவபெருமானே நேரில் வந்து செய்து வைத்த வழிபாட்டு முறை என சொல்லப்படுகிறது. இந்த அதிசய கோவில் எங்குள்ளது, இதன் வரலாறு என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி தாமிரபரணி நதிக்கரையில் அருள்பாலிக்கும் அருள்மிகு அம்மைநாதர் திருக்கோயில், சைவ சமயத்தில் மிகுந்த பெருமை பெற்ற திருத்தலமாக விளங்குகிறது. இந்தத் திருத்தலம் நவகயிலாயங்களில் இரண்டாவது கயிலாயமாகவும், சந்திர பகவானுக்குரிய பரிகாரத் தலமாகவும் போற்றப்படுகிறது. இத்தலத்தின் அம்பாள் ஸ்ரீ ஆவுடைநாயகி அம்மன் ஆவார். இங்கு பக்தியுடன் உடைத்த தேங்காயில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால், குடும்பத்தில் செல்வ வளம், மனநிம்மதி மற்றும் இறையருள் பெருகும் என்பது தலைமுறைகளாக பக்தர்களால் நம்பப்பட்டு வரும் ஐதீகமாகும்.
தல வரலாறு :
சிவபெருமானின் அருளைப் பெற வேண்டும் என்ற பேராவலுடன் வாழ்ந்தவர் உரோமச முனிவர். ஒருநாள் அவர் சிவபெருமானின் நேரடி தரிசனம் பெற வேண்டும் என்று விரும்பினார். அப்போது பொதிகை மலையில் தவமிருந்த அகத்திய முனிவரை அணுகி வழிகாட்டுமாறு கேட்டார். அகத்தியர் அவரிடம், “தாமிரபரணி நதிக்கரைக்குச் செல். ஒன்பது மலர்களை நதியில் விடு. அந்த மலர்கள் கரை ஒதுங்கும் இடங்களில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபடு. அங்கேயே உனக்கு சிவபெருமானின் அருள் கிடைக்கும்.” என்று அருளுரை வழங்கினார். அகத்திய முனிவரின் கட்டளையைத் தலைவணங்கி ஏற்ற உரோமச முனிவர், தாமிரபரணி நதியில் ஒன்பது மலர்களை விட்டார். அந்த ஒன்பது மலர்களும் கரை ஒதுங்கிய இடங்களில் தான் இன்று நவகயிலாயம் எனப் போற்றப்படும் ஒன்பது சிவத் திருத்தலங்கள் அமைந்துள்ளன. இவற்றில், இரண்டாவது மலர் கரை ஒதுங்கிய புனித இடமே இன்று சேரன்மாதேவி அம்மைநாதர் திருத்தலம். அங்கே உரோமச முனிவர் சிவலிங்கம் ஒன்றைப் பிரதிஷ்டை செய்து தினமும் பக்தியுடன் வழிபட்டார். அந்த அருள்மிகு சிவலிங்கமே இன்று அம்மைநாதர் என பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
அரசமரத்தின் கீழ் இருந்த சிவலிங்கம் :
உரோமச முனிவர் வழிபட்ட அந்த சிவலிங்கம் ஒரு பெரிய அரசமரத்தின் அடியில் இருந்தது. அந்தப் பகுதியில் வாழ்ந்த இரண்டு சிவபக்தி மிகுந்த சகோதரிகள், தங்களுடைய வாழ்க்கையை நெல் குத்தி, அரிசி விற்று நடத்தி வந்தனர். அவர்கள் எவ்வளவு பணி இருந்தாலும், ஒவ்வொரு நாளும் முதலில் அரசமரத்தின் கீழிருந்த சிவலிங்கத்திற்கு பூஜை செய்து, பின்னரே தங்கள் தொழிலைத் தொடங்குவார்கள். இறைவனே முதலில், பிறகுதான் உலக வாழ்க்கை என்பதே அவர்களின் வாழ்வியல்.
கோவில் கட்டும் ஆசை:
ஒருநாள் அவர்கள் இருவரும் மனம் வருந்தினர். “இவ்வளவு அருள்மிகு சிவலிங்கம் திறந்த வெளியில் யாரும் கவனிக்காமல் இருக்கிறது. நம்மால் இயன்றால் ஒரு சிறிய கோயிலாவது கட்ட வேண்டும்” என்று முடிவு செய்தனர். ஆனால், அவர்களிடம் அதற்குத் தேவையான பொருளாதார வசதி இல்லை. இருந்தாலும் அவர்கள் மனம் தளரவில்லை. அரிசி விற்று கிடைத்த வருமானத்தில் சிறிது சிறிதாக சேமிக்கத் தொடங்கினர். அவர்களின் ஒரே எண்ணம், “ஈசனுக்கு ஒரு ஆலயம் எழுப்ப வேண்டும்” என்பது தான்.
பக்தர்களின் வீடு தேடி வந்த சிவன்:
அவர்களின் அசைக்க முடியாத பக்தியைப் பார்த்த சிவபெருமான் ஒரு நாள், சிவனடியார் உருவத்தில் அவர்களின் இல்லத்திற்கு வந்தார். வீட்டிற்கு வந்த அடியவரை இரு சகோதரிகளும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். அவரை அமர வைத்து அன்போடு உணவு பரிமாறினர். அப்போது அந்த சிவனடியார் சுற்றிலும் பார்த்துவிட்டு மெதுவாக கூறினார். “இந்த வீட்டில் விளக்கு எரியவில்லை. வெளிச்சம் இல்லாத வீட்டில் நான் உணவருந்துவதில்லை.” இதைக் கேட்டதும் சகோதரிகள் பதறிப் போனார்கள். உடனே வீட்டில் விளக்கைத் தேடினர். ஆனால் எங்கும் விளக்கு கிடைக்கவில்லை.
செல்வ வளத்தை அருளிய தேங்காய் நெய் தீபம் :
அப்போது சமையலுக்காக வைத்திருந்த ஒரு தேங்காயை எடுத்தனர். அதை உடைத்து, அதன் உள்ளே நெய் ஊற்றி, திரியாக பஞ்சை வைத்து, அதே தேங்காயையே விளக்காக மாற்றி தீபம் ஏற்றினர். வீடு முழுவதும் தெய்வீக ஒளி பரவியது. அந்த ஒளியைப் பார்த்த சிவனடியார் பேரானந்தம் அடைந்தார். அன்போடு உணவருந்தினார். உணவு முடிந்ததும், அவர் தமது உண்மையான திருவுருவத்தை வெளிப்படுத்தினார். சிவபெருமான் அவர்களை ஆசீர்வதித்து, “உங்கள் பக்தி ஒருபோதும் வீணாகாது” என்று அருளாசி வழங்கி மறைந்தார். அந்த நாளிலிருந்து அந்த சகோதரிகளின் இல்லத்தில் செல்வ வளம் பெருகியது. வறுமை விலகியது. அவர்கள் சேமித்த செல்வத்தைக் கொண்டு தாங்கள் கனவு கண்டபடி, சிவபெருமானுக்கு அழகிய ஆலயத்தை எழுப்பினர். அதுவே இன்று நாம் தரிசிக்கும் அருள்மிகு அம்மைநாதர் திருக்கோயில் என்று தலபுராணம் கூறுகிறது.
இன்றும் தொடரும் சிறப்பு வழிபாடு :
இந்த வரலாற்றை நினைவுகூரும் வகையில் இன்றும் இத்திருத்தலத்தில் ஒரு தனித்துவமான வழிபாடு நடைபெறுகிறது. அதாவது, சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து, அம்பாளுக்கு மாதுளம்பழச் சாறு அபிஷேகம் செய்து, அம்பாள் சன்னதி முன் ஒரு தட்டில் அரிசியைப் பரப்பி, உடைத்த தேங்காயில் நெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். இந்த வழிபாட்டை பக்தியுடன் செய்வோருக்கு குடும்பத்தில் செல்வ வளம் பெருகும்,மனக்கவலைகள் நீங்கும், குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும், தொழில் மற்றும் பொருளாதார முன்னேற்றம் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் வழிபட்டு வருகின்றனர்.
கோயிலின் அரிய சிறப்புகள் :
இந்தத் திருக்கோயிலில் காண வேண்டிய சில அற்புதங்கள் உள்ளன. அவை,
– மண்டபத் தூணில் உரோமச முனிவர், சிவபூஜை செய்யும் அழகிய சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.
வடக்கு புறத் தூணில், இரு சகோதரிகள் நெல் குத்தி அரிசி தயாரிக்கும் காட்சி சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. கொடிமரத்தின் அருகில் திருநாளைப்போவார் நாயனார் (நந்தனார்) திருவுருவம் அமைந்துள்ளது. அவரது பக்திக்குச் சான்றாக, நந்தி சற்று விலகி இருப்பது இந்தத் திருத்தலத்தின் மற்றொரு தனிச்சிறப்பாகும். கொடிமரத்தின் அருகில் நின்று தரிசிக்கும் போது, விலகிய நந்தியையும் அதன் வழியாக அம்மைநாதரையும் ஒரே நேரத்தில் தரிசிக்க முடிவது பக்தர்களை மெய்சிலிர்க்கச் செய்கிறது.
தென்னாடுடைய சிவனே போற்றி!எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!அண்ணாமலை எம் அண்ணா போற்றி!கண்ணாரமுதக் கடலே போற்றி!