கோவில்களில் திருமணங்கள் செய்வது ஏன்?
ஓம் ஸர்வ மங்கள மாங்கல்யேஶிவே ஸர்வார்த்த ஸாதிகேஶரண்யே த்ரயம்பகே கௌரிநாராயணி நமோஸ்துதே!
கோவில்களில் திருமணங்கள் செய்வது ஏன்?
இருமனம் சேர்ந்து ஒரு மனமாவது திருமணம். திருமணத்தில் இணையும் தம்பதிகள் வாழையடி வாழையாக வாழ வேண்டும் என்பதற்காகவே பெரியோர்களின் ஆசியுடன் மணமக்கள் வாழ்த்தப்படுகின்றனர்.
இப்படியாக வாழ்க்கையில் முக்கியமான சடங்காக உள்ள இந்த திருமணம் தற்காலத்தில் எவ்வாறு நடத்தப்படுகின்றது என்றால் ஒவ்வொருவரும் தமது ஆடம்பரத்தையும், கௌரவத்தையும் எவ்வாறு எல்லாம் மற்றவர்களுக்கு வெளிக்காட்ட முடியுமோ அப்படியே திருமண ஏற்பாடுகளை போட்டி போட்டு செய்கின்றார்கள்.
அக்காலத்தில் திருமணத்தை தங்கள் இல்லத்தில் வைத்து நடத்தினார்கள். இன்னமும் கிராமப்புறங்களில் தங்கள் வீட்டிலேயே பந்தல் அமைத்து திருமணத்தை நடத்துபவர்களும் இருக்கிறார்கள். அவ்வாறு சொந்தமாக இடவசதி இல்லாதவர்கள் ஆலயங்களில் வைத்து திருமணத்தை நடத்தினார்கள்.
கோவிலில் திருமணம் செய்து கொள்வதால் கூடுதல் நற்பலன்கள் கிடைக்கும். ஆனால் தற்போதைய அவசரச் சூழலில், கோவிலில் திருமணம் செய்வது குறைந்து வருகிறது.
பொதுவாகவே கோவில்களில் திருமணங்களை வைத்துக் கொள்வது நல்லது. வாழ்க்கைத் துணையை ஆலயத்தில் ஏற்றுக் கொள்வதே சாலச்சிறந்தது.
அதற்காகத்தான் பண்டைய காலங்களில் கோவில்களை எழுப்பிய மன்னர்கள் பல நூற்றுக்கணக்கானோர் அமரும் வகையில் ஆயிரம்கால் மண்டபங்களையும் கட்டி வைத்தனர்.
மன்னர் காலத்தில் கணவன், மனைவி பிரிவு என்பது மிகவும் அபூர்வமான நிகழ்வாக இருந்தது. தலைமுறைகள் மாற்றத்தினால் பிரிவு அதிகரித்துள்ளது என்று சிலர் கூறினாலும், அந்தக் காலத்தில் இறைவனை சாட்சியாக கொண்டு வாழ்க்கைத் துணை ஏற்று கொண்டவர்கள் பிரிவதற்கு யோசிப்பர்.
திருமணம் கடவுளின் முன்னிலையில் நடைபெறுவதால், தம்பதிகள் அதற்குப் பின் இறைவனின் ஆசீர்வாதத்துடன் வாழ்க்கையை தொடங்குகிறார்கள். இது மண வாழ்க்கையில் நேர்மறை மாற்றங்களை ஏற்படுத்தும்.
அதற்கு காரணம் இறைவன் மீதுள்ள பக்தி, பயம். மேலும், கோவில்களில் எப்போதும் மந்திரங்கள் ஜபித்தல், ஸ்லோகங்கள் ஓதுதல், இறைவனை பற்றிய பாடல்கள், தெய்வீக நடவடிக்கைகள் மட்டுமே மேற்கொள்ளப்படுவதால் எப்போதும் நேர்மறை கதிர்கள் அங்கு இருக்கும். எனவே, அங்கு மாங்கல்யம் சூட்டிக் கொள்வது சிறப்பான பலன்களை தரும்.
கோவில்கள் பொதுவாக அமைதியான மற்றும் புனிதமான சூழலை கொண்டுள்ளன. இங்கு திருமணம் செய்வது, மணமக்கள் இருவரின் மனதிற்கும் அமைதியை தரும். இது திருமணத்தின் போது ஏற்படும் பதட்டங்களை குறைத்து தெய்வீகமான முறையில் அவர்களின் நம்பிக்கைகளை ஊட்டுகிறது.
ஒரு சில ஜாதகங்களுக்கு திருமணமே கேள்விக்குறியாக இருக்கும். அதையும் தாண்டி வரன் அமைந்து திருமணம் நிச்சயிக்கப்பட்டால், அவர்கள் எத்தனை ஆண்டுகள் இணைந்து வாழ்வார்கள் என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கும்.
எனவே, அதுபோன்ற ஜாதக அமைப்பை உடையவர்கள், கடுமையான தோஷங்கள் உடையவர்கள், ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடக்கும் ஜாதகதாரர்கள் கோவிலில் திருமணம் செய்து கொள்வது நல்லது.
கோவில்களில் மாங்கல்யம் சூட்டி கொள்வதால் சில பயன்களும் உண்டு. கோவிலில் தாலி கட்டி கொண்ட தம்பதிகள், முதலில் அக்கோவிலில் உள்ள மூலவரிடம் ஆசீர்வாதம் பெறும் பாக்கியத்தை பெறுகிறார்கள். இது மிகப்பெரிய நல்ல நிகழ்வு.
தனியார் மண்டபங்களில் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. எனவே, கோவில்களில் மாங்கல்யம் சூட்டிக்கொள்வதே சாலச்சிறந்தது.
ஓம் ஸர்வ மங்கள மாங்கல்யேஶிவே ஸர்வார்த்த ஸாதிகேஶரண்யே த்ரயம்பகே கௌரிநாராயணி நமோஸ்துதே!