சிவ வழிபாடு செய்யும் அனைவரும் அவசியம் அறிந்து வைத்திருக்க வேண்டிய சிவரகசியங்கள்.

நற்றுணையாவது நமச்சிவாயவே!

0 51

சிவ வழிபாடு செய்யும் அனைவரும் அவசியம் அறிந்து வைத்திருக்க வேண்டிய சிவரகசியங்கள்.

சிவன் தத்புருஷம், அகோரம், வாமம், சத்யோஜாதம், ஈசானம் என்கிற ஐந்து முகங்களைக் கொண்டவர்.

படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்கிற ஐந்து தொழில்களையும் செய்பவர். திருநீறு, ருத்ராக்ஷம், பஞ்சாக்ஷரம் ஆகிரயவற்றில் விருப்பமுடையவர். ருத்ரம், சமகம் முதலான மகாமந்திரகளால் மனம் மகிழ்பவர். கோபமான வடிவில் ருத்ரனாகவும், சாந்தமான வடிவில் தக்ஷிணாமூர்த்தியாகவும் திகழ்பவர்.

சிவனுக்கு அவதாரங்கள் இல்லை என்றாலும், காரியார்த்த காரணமாக உருவங்களைக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இவற்றில் தக்ஷனை கொல்வதற்காக வீரபத்திரர்; தாருகவனத்து ரிஷிகளின் கர்வத்தை அடக்க பிட்சாடண மூர்த்தி; மார்க்கண்டேயனுக்காக யமனைக் கொல்ல காலசம்ஹாரமூர்த்தி; பிரம்மாவைத் தண்டிக்க பைரவர்; ஞான வடிவாக அம்பலம் தன்னில் ஆனந்த நடமாடும் தில்லைக் கூத்தன் நடராஜ வடிவம் – இப்படியாக பல வடிவங்களில் சிவனை தரிசித்து மகிழ்ந்திட ஏதுவாகிறது. பதஞ்சலி முதலான முனிவர்கள் தரிசித்து மகிந்த குஞ்சித பாதம் தில்லை சிற்சபேசனின் பொற்பாதமன்றோ!

இதய ஆகாசம் – அதை தகராகாசம் என்பார்கள் – வெளியே வான்வெளி ஆகாசம் போலவே விரிந்து பரந்தது இந்த இதய ஆகாசமும். பரமாகாச சொரூபியான பரமன், ஆன்ம சிற்றணுவிலும் தகராகாத்திலும் திகழ்கிறார். “த்” என உச்சரிக்கையில், நுனிநாக்கு மேற்பல் அடியைத் தீண்டி நிற்பதுபோல, அகமதில் இறையதை உணர்த்தப்பெறும் இடம் தகராகாசம் ஆகும். “த”கரம் எனும் மெய்யெழுத்து, தமிழ் நெடுங்கணக்கில் ஏழாவது வரிசையில் இருப்பதுபோல், ஆறறிவுக்கும் மேற்பட்ட ஏழாவது அறிவு – மெய்யறிவு இந்த தகராகாசத்தில் சித்தியாகின்றதோ! தகரகன நடனபதி என்றும் தகராலய மூர்த்தி என்றும் வழங்கப்படுபவன் நதிப்புனை ஈசன். ஈசனின் திருவருளால் வள்ளாலாரெனும் அருட்கொடைவள்ளல் பெருமான் அருட்பெரும்ஜோதி அகவலதில் தான் பெற்ற காட்சியனுபவத்தை “உபய பக்கங்களும் ஒன்றெனக் காட்டிய அபய சிற்சபையில் அருட்பெரும்ஜோதி” எனப்பாடி மகிழ்கின்றார்.

சத்யோஜாதம்:

பிரம்ம தேவன் சிவபெருமானை மேற்கு திசையினை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்த போது இறைவன் அழகிய வடிவத்துடன், வெண்மை நிறமான இளையோனாய் பிரம்மன் முன்பு தோன்றினார். இந்த முகமே சத்யோஜாதம் எனப்படும்.

சத்யோஜாத முகத்திலிருந்து தோன்றிய முகங்கள்:
1.லிங்கோத்பவர்

3.உமாமகேசர்
4.அரிஹரர்
5.அர்த்தநாரி

வாமதேவம்:

மீண்டும் பிரம்ம தேவன் வடக்கு திசையினை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்த போது இறைவன் சிவந்த நிறத்துடன் பாம்பை அணிந்தும், மானும் மழுவும் கைகளில் ஏந்தி பிரம்ம தேவனுக்கு காட்சி கொடுத்தார். இறைவனின் இந்த முகமே வாமதேவம் எனப்படும்.

வாமதேவ முகத்திலிருந்து தோன்றிய 5 முகங்கள்:
1.கங்காதரர்
2.சக்ரவரதர்
3.கஜாந்திகர்
4.சண்டேசானுக்கிரகர்
5.ஏகபாதர்

தத்புருஷம்

அதன் பிறகு பிரம்ம தேவன் கிழக்கு திசையினை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்தார். இறைவன் தங்க நிறத்துடன் பிறையை சென்னியில் சூடி காட்சி கொடுத்தார். இறைவனின் இந்த முகமே தத்புருஷம் எனப்படும். பிரம்மனின் தவத்தால் மகிழ்ந்த இறைவன் உளம் மகிழ்ந்து தனது அழகிய உருவத்திலிருந்து காயத்ரீ தேவியை உண்டாக்கி பிரம்ம தேவனிடம் அளித்தார். காயத்ரீயை வணங்கி வருபவர்களுக்கு நரகம் கிடையாது எனவும் வரமளித்தார்.

தத்புருஷ முகத்திலிருந்து தோன்றிய வடிவங்கள்:

 

1.பிட்சாடனர்
2.காமாரி
3.காலாரி
4.சலந்தராரி
5.!திரிபுராரி

அகோரம்:

பிறகு பிரம்மா தெற்கு திசையினை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்தார். இறைவன் முக்கண் கொண்டவராய் நெருப்பினையும், வாளினையும் கரத்தில் கொண்டவராய் கரிய நிறத்துடன் தோன்றினார். இறைவனின் இந்த முகத்திற்கு அகோரம் என்று பெயர்.

அகோர முகத்திலிருந்து தோன்றிய வடிவங்கள்:
1.கஜசம்ஹாரர்
2.வீரபத்திரர்
3.தக்ஷிணாமூர்த்தி
4.கிராதமூர்த்தி
5.நீலகண்டர்

ஈசானன்:

கடைசியாக பிரம்ம தேவன் ஆகாயத்தினை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்தார். இறைவன் சாம்பல் வண்ணத்துடன் முக்கண் கொண்டவராயும், இளமதியை சென்னியில் சூடியவாறும், கோரைப்பற்கள் கொண்ட உருமாய் இரண்டு பெண்களுடன் தோன்றினார். இறைவனின் இந்த முகமே ஈசானம் எனப்படும். அதில் ஒரு பெண் மாயன் முதல் தேவர்கள் வரை அனைவரையும் ஈன்ற அன்னை ஆவாள். மற்றொரு பெண் வெண் தாமரையில் வீற்றிருக்கும் கலைமகள் ஆவாள்.

ஈசான முகத்திலிருந்து தோன்றிய வடிவங்கள்:
1.சோமாஸ்கந்தர்
2.நடராசர்
3.ரிஷபாரூடர்

 

4.கல்யாணசுந்தரர்
5.சந்திரசேகரர்

இந்த ஐந்து முகங்களையும் நினைத்து தியானம் செய்தாலும் அல்லது வழிபாடு செய்தாலும் இப்பிறவியில் சகல சுகங்களும் கிட்டி மறுபிறவியில் முக்தியும் கிட்டும் என்பது பிரம்ம தேவனின் வாக்கு ஆகும்.

நற்றுணையாவது நமச்சிவாயவே!

 

Leave A Reply

Your email address will not be published.